நஷ்டத்தில் பொறுப்பேற்ற சதொச, லக்சல உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றன: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

🕔 November 1, 2017

 

– பரீட் இஸ்பான் –

ஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த போது பொறுப்பேற்கப்பட்ட சதொச, லக்சல, சீனி மற்றும் அரச வரத்தக கூட்டுத் தாபனம்  போன்ற நிறுவனங்கள் தற்போது லாபத்தில் இயங்கி வருகின்றன என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச  நிறுவனத்தில்  இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது. இதனால் நாடு முழுவதிலுமுள்ள 370 சதொச நிறுவனங்களினூடாக அரிசி உட்பட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய வாழ்க்கை செலவுக்கான அமைச்சரவை உப குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளுக்கிணங்க  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய ஒரு லட்சம் மெட்ரிக்தொன் அரிசியை தற்போது இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. சதொச ஊடாக சில்லறையாகவும் மொத்தமாகவும அதனை நாம் விநியோகித்து வருவதோடு நடமாடும் சதொச வேலைத்திட்டத்தினூடாக 30 லொறிகளில் அத்தியாவசிப் பொருட்கள் விநியோகம் செய்கிறோம். இன்னும் ஒரு சில வாரங்களில் 100 லொறிகளில் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரிசித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்க மேலும் இரண்டு லட்சம் மெட்ரிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தையில் சாதாரண விலைகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கார்கில்ஸ், ஆர்பிகோ மற்றும் சந்தையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தக அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளது. அங்கும்  சாதாரண விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தினூடாக முகவர்களை இணைத்து அவர்களின் ஊடாக மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களை பதிவு செய்து, சதொச முகவர்களாக செயற்படும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டில் சகல பாகங்களுக்கும் சாதாரண விலையில் அத்தியாவசிப்பொருட்களை விநியோகிக்க முடியும்.

சதொசவை நாம்   பொறுப்பேற்கும் போது 300  ஆகக் காணப்பட்ட சதொச கிளைகளை 370 ஆக அதிகரித்துள்ளோம். இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் 30 கிளைகளை ஆரம்பித்து 400 ஆக அதிகரிக்கவுள்ளதோடு, இவ்வருட இறுதியில் 500 கிளைகளை நாடு பூராகவும் விஸ்தரிக்கவுள்ளோம்.

அத்தோடு இன்று முதல் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாவுக்கும் பருப்பு 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் விற்கப்படும்.

அத்தோடு நாட்டில் ஏற்பட்ட தேங்காய் விலை அதிகரிப்பைக் கருத்திற்கொண்டு சதொச நிறுவனத்தினூடாக தேங்காய்களை கொள்வனவு செய்து 65ரூபாவுக்கு கொள்வனவு செய்து எந்தவித இலாபமுமின்றி அதே விலையிலேயே  விற்கப்படுகிறது” என்றார்.

இச்சந்திப்பில் சதொச நிறுவனத்தின் தலைவர் அமைச்சர் டி.எம்.கே.பி.தென்னக்கோன், அமைச்சின் மேலதிக செயலாளர் சீதா, மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர்  இந்திக்கா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்