ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்றுவதில், கிழக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் புதிய தடையை நீக்குங்கள்: ஆளுநரிடம் உதுமாலெப்பை கோரிக்கை

🕔 August 4, 2017

– எம்.ஜே.எம். சஜீத் –

கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா மற்றும் ஹஜ் ஆகிய சமயக் கடமைகளுக்காக பெற்றுக் கொள்ளும் விடுமுறை தொடர்பில் புதிதாக விதிக்கப்பட்ட தடையினை நீக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே, மேற்படி கோரிக்கையினை  அவர் முன்வைத்தார்.

கடந்த 05 வருட காலத்துக்குள் உம்றாமற்றும் ஹஜ் கடமைகளுக்காக சஊதி அரேபியா சென்றவர்கள் மீண்டும் அதே கடமைகளுக்காக சஊதி செல்வதற்கு விடுமுறை வழங்க முடியாது என கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆளுநரிடம் உதுமாலெப்பை  மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் உம்றா மற்றும் ஹஜ் ஆகிய சமயக் கடமைகளுக்காக மக்கா நகர் செல்லும் போது வழங்கப்படும் விடுமுறை தொடர்பில், புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாதம் முற்பகுதியில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வீசா மற்றும் வைத்திய அறிக்கை ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்து விட்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற காத்திருக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இறுதி நேரத்தில், வெளிவந்த தடை அறிவிப்பு பாரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

மேற்படி அறிவிப்பின் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களின் சமய கடமையினை நிறைவேற்ற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை அடைந்துள்ளனர்.
மத்திய அரசாங்க கல்வி அமைச்சில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் முஸ்லிம் அதிகாரிகள், ஆசிரியர்கள் புனித மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாடு செல்வதற்கான விடுமுறைகள் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாண அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 05 வருட காலத்துக்குள் உம்றா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் ஒரு முறை உம்றா மற்றும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு விடுமுறை வழங்க முடியாது என்ற நிபந்தனையையும்,  இலங்கைக்கு வெளியே சமயயாத்திரை செல்பவர்கள் பாடசாலை விடுமுறை காலங்களிலே செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற புதிய விதியும் வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் துல்கஃதா, துல் ஹஜ் ஆகிய மாதங்களில்தான் தங்களின் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா நகர் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இந்த நிபந்தனையைால் கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களுடைய மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை இழக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
எனவே, இந்த புதிய நிபந்தனைகளை நீக்கி – கிழக்கு மாகாண முஸ்லிம் அதிகாரிகளும், ஆசிரியர்களும் தங்களின் மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அதேவேளை, இந்த விடயம் புதிய நிபந்தனையானது ஆளுநருக்கும் கிழக்கு மாகாண முஸ்லிம் ஆசிரியர்கள், அதிகாரிகளுக்குமிடையில் மனக்கசப்புகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளதுடன், இந்த நிலைமை ஒரு சில அதிகாரிகளினது தவறுதலான வழிகாட்டலின் காரணமாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இச் சந்திப்பில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர் மற்றும் நாகலிங்கம் திரவியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்