வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி; பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார்

🕔 August 2, 2017
– அகமட் எஸ். முகைடீன் –

ல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வாழ்வாதார உதவிகளை இன்று புதன்கிழமை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு இன்று  புதன்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் கல்முனை ஆசாத் பிளாசா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவான நிதி ஒதுக்கீடு மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீசின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு என்பவற்றின் மூலம் இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வாழ்வாதார உதவிப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. ராஜதுரை, கணக்காளர் ஏ.எல். ஜவாஹிர், சமூர்த்தி தலமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர். சாலிஹ், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், ஏ.எம். றினோஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்ளும்வகையில் தையல் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, இடியப்பம் உற்பத்தி செய்யும் உபகரணங்கள், நெசவு நூல் சுற்றும் இயந்திரம் மற்றும் தராசு போன்ற பல்வேறுபட்ட உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. அத்தோடு விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

அத்தோடு கல்முனை, கிறீன்பீல்ட் றோயல் வித்தியாலயத்துக்கு மடிக்கணினி ஒன்று வித்தியாலய அதிபரிடம்  கையளிக்கப்பட்டது.

மேலும் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு அலுவலக கைப்பைகளும் இதன்போது வழங்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்