கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

🕔 July 31, 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல் சக்தியும் யுத்தம் நிறைவுற்ற பின்னர் மேற்குலக ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண சபை கலைந்ததும், அதிகாரிகளுக்கு மேலதிகமாக, சபையில் அரசியல் ரீதியாக அதிகாரம் பொருந்தியவர்கள் இருவர்தான் எஞ்சுவர். ஒருவர் ஆளுநர் ரோகித போகொல்லாகம. மற்றவர் சபைத் தவிசாளர் கலப்பதி ஆகியோராவர்.

மாகாண சபைகள் சட்டத்துக்கு அமைவாக சபையொன்றின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் தவிசாளர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களின் பதவிகள், சபை கலைந்தவுடன் வறிதாகும். அடுத்த தேர்தல் முடிந்து, புதிய சபை பதவியேற்கும் வரை தவிசாளர் பதவி தொடரும்.

எனவே, கிழக்கு மாகாண சபை கலைந்த பின்னும் இரண்டு சிங்களவர்களின் அதிகாரம் நிலைத்து நிற்கும். ஆதலால், கிழக்கின் அதிகாரம் முழுமையாக அடுத்த தேர்தல் வரை, கிழக்கு சிறுபான்மை சமூகமான சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும். அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள்.

ஆளுநர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர், தவிசாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர். இவ்விரு தேசியக் கட்சிகளும் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதால் நன்மை அடையும்.

மாகாண சபைத் தேர்தல் எத்தனை வருடங்களுக்கு ஒத்திப் போடப்படும் எனத் தெரியாது. ஒத்திப் போடப்படும் வரையான அத்தனை காலமும் கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும்.

அது எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் தேசிய அரசியல் சக்தியும் ,முஸ்லிம் தேசிய அரசியல் சக்தியும் யுத்தம் நிறைவுற்ற பின் மேற்குலக ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியால் இலகுவாக ஏமாற்றப்படுகின்றன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்