எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம்: அரசாங்கத்திடம் நாமல் கோரிக்கை
“அரசியலுடன் சம்பந்தப்படாத எமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
“தற்போதைய அரசாங்கம் எமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது” எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
றக்பி வீரர் வசிம் தாஜூதீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, நாமல் ராஜபக்ஷவின் தாயார் சிராந்தி ராஜபக்ஷ மற்றும் நாமலின் சகோதரர் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, அரசியலுடன் தொடர்பில்லாத தமது குடும்பத்தினரை பழிவாங்க வேண்டாம் என்று, நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.