பி.பி.சி. தமிழோசை, இனியில்லை: 76 வருட வரலாறு, மௌனிக்கிறது

🕔 April 6, 2017
– எஸ். ஹமீத் –

பி.பி.சி. யின் தமிழ் மொழி சேவையான ‘தமிழோசை’ ஒலிபரப்பு வெகு விரைவில்  முடிவுக்கு வருகிறது. இந்தச் செய்தியானது தமிழ் பேசுவோரிடையே மிக்க கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் அரச ஊடகமான பி.பி.சி.யானது, 1927ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது . ஆரம்பத்தில் ஆங்கில மொழியில் மட்டுமே வானொலி, தொலைக்காட்சிகளை நடத்தி வந்த பி.பி.சி. சேவை,  காலப்போக்கில் பல்வேறு மொழிகளில் வானொலிச் சேவைகளை நடத்தத் தொடங்கியது. இவற்றில் தமிழ், சிங்களம் மற்றும் ஹிந்தி உட்பட 27  மொழிகள் அடங்குகின்றன.

அதிகரித்த செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் தமிழ் மொழி வானொலி நிகழ்ச்சிகளுக்கான நேயர்களின் குறைந்த வரவேற்பு போன்ற பல காரணங்களினால், 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி. தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை இம்மாதம்  30 ஆம் திகதியுடன் நிறுத்திக் கொள்கிறது.

பி.பி.சி. யின் தமிழ் மொழி ஒலிபரப்பு, உலகத் தமிழர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது.  அதன் செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்தனவாகவும் கருதப்பட்டன. இலங்கையின் உள்நாட்டுப் போர் விடயங்களில் இலங்கை வானொலி மற்றும் தொலைகாட்சி செய்திகளை விடவும், பி.பி.சி. யின்  தமிழ்ச் செய்திகளையே தமிழ் பேசும் மக்கள் அதிகம் நம்பிக்கையோடு செவிமடுத்தனர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.

எவ்வாறாயினும், இணைய தளம் மூலமாக பி.பி.சி. தமிழோசை தொடர்ந்து ஒலிபரப்பாகுமென்பதும் , இலங்கையில் ஒரு  தனியார் வானொலியின்  பண்பலைவரிசையில் தினமும்  05 நிமிடங்கள், தமிழோசை செய்திகள் மட்டும்  ஒலி பரப்பப்படுமென்பதும் பி.பி.சி. தமிழோசை நேயர்களுக்கு சற்று ஆறுதலான செய்தியாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்