கருணா கட்சியின் தலைமைச் செயலகம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னைநாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் புதிய கட்சியின் தலைமைச் செயலகம் சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரையுடைய மேற்படி கட்சியின் தலைமைச் செயலகத்தினை கருணா அம்மான் திறந்து வைத்தார்.
இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு எனும் முகவரியில், இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த திறப்பு விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வி. கமலதாஸ், கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான நவரட்ணராஜா, பிரச்சார செயலாளர் திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன் மற்றும் பிரதித் தவிசாளர் சோமசுந்தரம் ஸ்ரீ ஹரன் உட்பட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலக திறப்பு விழாவை தொடர்ந்து, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.