கிழக்கு முதலமைச்சர், இழி நிலை அரசியல் செய்கின்றார்: மாகாண சபை உறுப்பினர் சுபையிர்

🕔 February 7, 2017
Subair - 011– எம்.ஜே. எம். சஜீத் –

ழிநிலை அரசியலை செய்கின்ற கிழக்கு மாகாண முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையில் அகற்றுவதற்கு, ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் தன்னோடு கைகோர்க்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிரின் நிதி ஒதுக்கீட்டினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்களை, ஏறாவூர் பசீர் சேகுதாவூத் வித்தியலயத்துக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை அதிபர் ஏ. பாறுக் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட அழைப்பினை விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“எமது பிள்ளைகளின் நன்மை கருதி இப்பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த வருடமும் இந்த வருடமும் கணிசமான உதவிகளைச் செய்துள்ளேன். தொடர்ந்தும் கல்விக்காக பல உதவிகளைச் செய்யவுள்ளேன்.

இப்பாடசாலையினுடைய காணி உறுதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை எனவும், அதனை உடனடியாக பெற்றுத்தருமாறும் பாடசாலை அதிபர் என்னிடம் வேண்டிக் கொண்டார். அதற்கிணங்க, எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலையின் காணி உறுதிப்பத்திரத்தினை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் பூர்வீக காணிகளின் அனுமதிப் பத்திரங்களைக் கூட போராடித்தான் பெற வேண்டிய சூழ்நிலை முஸ்லிம் சமூத்துக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கும் இப்போது அரசியல் அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

எமது பிரதேச காணிப்பிரச்சிணைகள் விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இரட்டை வேடம் போடுவதனையும், அவற்றின் உண்மை நிலைகளை மறைத்து செயற்படுவதனையும்அவதானிக்க முடிகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அதிகாரத்தினூடாக இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆர்வம் காட்டவே இல்லை. மக்களினுடைய பிரச்சினைகளை தீர்க்கின்ற விடயத்தில் ஆர்வம் காட்ட வேண்டிய முதலமைச்சர், அரசியல்வாதிகளை பழிவாங்குகின்ற விடயத்திலே அக்கறை செலுத்துகின்றார்.

குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளேன். எனது நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை கையளிப்புச் செய்கின்ற நிகழ்வுகளைக் கூட செய்ய வேண்டாம் என, பாடசாலை அதிபர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிடுகின்றார்.

அதே போன்று உள்ளுராட்சி மன்றங்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றில் மக்களுடைய பிரச்சிணைகளை  தீர்க்க நடவடிக்கை மேற்கொள்கின்ற போது, அவற்றினை தீர்க்க வேண்டாமெனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அச்சுறுத்தி வருகின்றார். இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான அரசியலையே அவர் செய்து வருகின்றார்.

இவ்வாறு சிரஷ்ட அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் புறக்கணித்து அரசியல் பழிவாங்கல்களைச் செய்யும் முதலமைச்சரை வைத்திருப்பது ஜனநாயகத்துக்கும், இந்த மாகாணத்துக்கும்ஆரோக்கியமானதல்ல. எனவே சிறந்த ஜனநாயகத்தை நேசிக்கின்ற அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இழிநிலை அரசியலை செய்யும் முதலமைச்சரை எதிர்வரும் மாகாண சபையிலிருந்து அகற்றுவதற்கு என்னோடு கைகோர்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் இந்த மண்ணில் எதையுமே செய்யவில்லை. மாறாக, தான் பிறந்த வீட்டை தனது சொந்த தொழில் பேட்டையாகவும், அதே போன்று தன்னுடைய சகோதரனுடைய வீட்டை மற்றுமொரு தொழில் போட்டையாகவும் மாற்றியுள்ளார். இவற்றினைத் தவிர அவரால் ஒன்றுமே நடக்கவில்லை.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கடந்த காலங்களில் கிழக்கில் முதலீடு செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவதாகவும், அதனூடாக பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாகவும் வீராய்ப்பு பேசினார்.

கிழக்கில் முதலீடு எனும் போர்வையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வந்து பல மாநாடுகளை நடாத்தினார். அதற்காக கிழக்கு மாகாண சபையின் பல மில்லியன் ரூபா பணத்தினை செலவு செய்தார். இறுதியில் கிழக்கில் எந்தவொரு வெளிநாட்டவரும் முதலீடு செய்யவுமில்லை, யாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கவுமில்லை இதில் பல மில்லியன் ரூபா நிதிதான் வீணடிக்கப்பட்டது.

அதேபோன்றுதான், பெண்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதனை குறைக்கப் போவதாகவும், விதவைகள் அன்றாட வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் கிழக்கில் சுயதொழில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் முதலமைச்சர் கடந்தகாலங்களில் உறுதியளித்தார். கடைசியில் முதலமைச்சர் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு உறுதிமொழிகளையும் நிறைவேற்றவில்லை. கிழக்கில் இவருடைய ஆட்சிக்காலத்திலே அதிகமான பெண்கள் வெளிநாடு செல்வதனை அவதானிக்க முடிகிறது.

போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதனையும், அரசியல் பழிவாங்கல்களையும் முதலமைச்சர் முதலில் நிறுத்த வேண்டும். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மாகாணத்திலே செய்த பணிகளில் சிறிதளவேனும் தற்போதைய முதலமைச்சர் ஹாபீஸ் நசீரால் செய்ய முடியாமல் போயுள்ளமை அவருடைய அரசியல் இயலாமையாகும்” என்றார்.Subair - 022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்