ஜனாதிபதியின் மரணத்துக்கு திகதி குறித்த ஜோதிடர், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இம் மாதம் 26ஆம் திகதி மரணமாவார் எனத் தெரிவித்த ஜோதிடர், நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் கிரக மாற்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக, ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி என்பவர் கூறியிருந்தார்.
இதன்படி, ஜனாதிபதி உயிரிழக்கவுள்ளதாக பிரசாரம் மேற்கொண்டமையினூடாக, குறித்த ஜோதிடர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சித்தார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோதிடர் விஜயமுனி, நாட்டை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டு தூதுவர் அலுவலகத்தின் ஊடாக, தனக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குமாறு ஜோதிடர் கோரியுள்ளதாக, ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்தமையினால், அவர் அவுஸ்ரேலியாவுக்கு தப்பி செல்ல ஆயத்தமாகுவதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என்று, குறித்த ஜோதிடர் ஏற்கனவே ஆரூடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தனது நிலைப்பாட்டினை மாற்றியுள்ள ஜோதிடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை, ஜனாதிபதியின் மரணம் தாமதிக்கும் என குறிப்பிட்டு வீடியோவொன்றினை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.