நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்
இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்
சாய்ந்தமருதில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.
தற்போது நாட்டில் முஸ்லிங்களுக்கெதிரான கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் நிலையில், புலனாய்வுத்துறையினரே நிராகரித்த கருத்தொன்றை நாட்டின் உயரிய சபையில் முன்வைத்திருப்பது முஸ்லிங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்படுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் உலகில் முதன் முதலாக தீவிரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பியது இஸ்லாம் மார்க்கமே என்ற வரலாற்று உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், இலங்கையிலுள்ள முஸ்லிங்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ வாபஸ் பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் அனைவருடனும் வாழ விரும்பும் சமூகம் என்று கூறிய முதலமைசர்சர், திட்டமிட்ட வகையில் அவர்களை சீண்டிப் பார்க்கும் விதமான கருத்துக்கள் வெளிவருவதன் பின்னணயில், ஸியோனிச சக்திகள் இயங்குகின்றனவா என்ற கேள்விகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமெனவும், சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.