மு.கா. தலைவருக்கு சாய்ந்தமருதில் எதிர்ப்பு; பறிபோகிறதா கோட்டை?
– றிசாத் ஏ காதர் –
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிரான சுவரொட்டிகளும், கறுப்புக் கொடிகளும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மு.கா. தலைவர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருதுக்கு வருகை தரவிருந்த நிலையிலேயே, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு, கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன.
கல்முனை அபிவிருத்தி அங்குரார்ப்பணம் எனும் மகுடத்தில், கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில், அமைச்சர் ஹக்கீம் இன்று திங்கட்கிழமை பங்கேற்று வருகின்றார்.
இந்த நிலையிலேயே, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் ஹக்கீமுக்கு எதிரான மேற்படி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
அதேவேளை, அமைச்சர் ஹக்கீம் இன்று சாய்ந்தமருதில் அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் பொருட்டு, திரை நீக்கம் செய்யவிருந்த பதாதைகளும் கிழித்து வீசப்பட்டுள்ளன.
சாய்ந்தமருது பிரதேசத்துக்கு உள்ளுராட்சி சபையொன்றினை உருவாக்கித் தருவதாக மு.கா. தலைவர் ஹக்கீம் பலமுறை வாக்குறுதியளித்திருந்தும், அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக அப் பிரதேச மக்கள் குற்றம்சாட்டி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாதொரு நிலையிலேயே ஹக்கீமுடைய வருகைக்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலகட்டத்தில் மு.காங்கிரசின் கோட்டையாக சாய்ந்தமருது இருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்திருந்தபோது, சாய்ந்தமருதுப் பிரதேசம் முஸ்லிம் காங்கிரசின் முழுமையான ஆதரவுத்தளமாக விளங்கியது.
ஜெமீல் மற்றும் சிராஸ் ஆகியோர் சாய்ந்தமருதுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், மேற்படி இருவரும் மு.கா.விலிருந்து விலகியமையினை அடுத்து, சாய்ந்தமருதுப் பிரதேச்தில் மு.காங்கிரஸ் மிக மோசமான வீழ்ச்சியினைக் கண்டு வருகிறது.
மு.கா. தலைவருக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள், மு.கா.வின் வீழ்ச்சியினை அம்பலப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.