கஞ்சிகுடியாறு குளம் புனரமைப்பு; அமைச்சர்கள் நசீர், துரைராஜசிங்கம் ஆரம்பித்து வைத்தனர்
– சப்னி அஹமட் –
திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்துக்கான புனரமைப்பு வேலைத் திட்டம் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசன அமைச்சர் கிருஸ்ணப்பிள்ளை துரைராஜசிங்கம் ஆகியோர் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
உணவு, விவசாய ஸ்தாபனத்தின் செயற்றிட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் 63 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், இக்குளத்தின் அணைக்கட்டு உள்ளிட்டவை புனரமைக்கப்படவுள்ளன.
சிறுபோக நெற்செய்கைக் காலத்தில் 1,100 ஏக்கர் நெற்செய்கைக் காணிகளுக்கு, இக்குளத்திலிருந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இக்குளத்தின் அணைக்கட்டு மற்றும் வான்கதவுகளை மேலும் 03 அடிக்கு உயர்த்தி புனரமைப்புச் செய்வதன் மூலம், மேலும் 600 ஏக்கருக்கு நீர் விநியோகிக்க முடியுமென நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெ. தவராஜா தெரிவித்தார்.