நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை; மக்கள் குறை கேட்டறிந்தார் ஹக்கீம்
🕔 August 18, 2016
– சப்னி அஹமட் –
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை – அம்பாறை நகரில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையினை, துறைசார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்ததோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இந்த நடமாடும்சேவை, நாளை வெள்ளிக்கிழமையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அம்பாறையில் அமைந்துள்ள – கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறும்.
அம்பாறை மாவட்ட குடியிருப்பாளர்கள் – தாம் வாழும் பிரதேச வீதிகளில் பிரதான நீர்க் குழாய்கள் போடப்படாத நிலையில், இதுவரையில் தீர்த்து வைக்கப்படாதுள்ள குடி நீர்ப் பிரச்சினைகள், குடி நீரிணைப்புப் பெற கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் அவ்வீதிகள் சம்பந்தப்பட்ட தகவல்களை அல்லது அவர்களின் பிரச்சினைகளை உள்ளடக்கிய முறைப்பாட்டினை எழுத்து மூலம் கொண்டு சென்று, அம்பாறை நகரில் இடம்பெறும் இந்நடமாடும் சேவையில் கொடுத்து, துரிதகதியில் தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும்.
இன்றைய நடமாடும் சேவையில், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித் தலைவர் ஷபீக் ரஜாப்தீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர் மற்றும் யூ.எல்.எம். முபீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.