வடக்கு – கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ், ஓர் இனவாதி: மு.கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

🕔 August 18, 2016

Mubeen - 099ணைந்திருந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரித்த, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் ஓர் இனவாதி என்று, மு.காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான யூ.எல்.எம் முபீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்கள்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பத்தை மூட்டிவிட்டனர் என்றும், முபீன் கூறினார்.

இடம்பெயர்ந்து அசையாச் சொத்துக்களை இழந்த ஏறாவூர் பொதுமக்களுடனான சந்திப்பொன்று, நேற்று  புதன்கிழமை ஏறாவூர் மக்காமடி பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“வடக்கிலிருந்து கிழக்கைப் பிரித்த இனவாதியான அதாவுல்லாஹ்தான், புலிகளுடனான பேச்சுவார்த்தைகள், வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இடம்பெற்றபோது, அந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் காங்கிரஸ் பங்குபற்றக் கூடாது என்று கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்குள் பிளவுகளை ஏற்படுத்தினார்.

ஆனாலும், கட்சிக்குள் இருந்த இனவாதத்துக்கு எதிரான அதிகபட்ச ஆதரவு என்ற மனோநிலையானது, அதாவுல்லாஹ்வின் இனவாதக் கருத்துக்களுக்குச் செவிசாய்க்கவில்லை.

கிழக்கு மாகாணத்திலே முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை, பிராந்திய மட்டத்திலே இருந்த புலித் தலைமைகளோடு பேசித் தீர்க்க வேண்டும் என்று, பிரபாகரன் தலைமையில் அப்போது முடிவெடுக்கப்பட்டது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை புலிகளுக்கு எடுத்துக் கூறும் ஒழுங்குகளுக்கு நான்தான் தலைமை தாங்கினேன்.

அப்போது புலிகளால் கையகப்படுத்தப்பட்ட ஏறாவூர் விவசாயிகளின் நெற்செய்கைக் காணிகளுக்குரிய நஷ்டஈட்டை, புலிகளிடமிருந்தே லட்சக்கணக்கான ரூபாயாகப் பெற்றுக் கொடுத்ததை, பெருமையோடு இவ்விடத்தில் சொல்ல வேண்டும்.

 

தமிழ் – முஸ்லிம் சமூகத் தலைவர்களின் தூரநோக்கான சிந்தனைகளாலும் தியாகத்தாலும், மீண்டும் இன ஐக்கியம் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

இந்தத் துளிரை கருகிப்போக விடக் கூடாது. தமிழ் முஸ்லிம் ஐக்கியம் எனும் விருட்சத்தை நீரூற்றி வளர்த்தால், சமாதானம் எனும் சிகரத்தை எட்டிப் பிடித்து நிம்மதியாக வாழலாம். அதற்கு நாம் அனைவரும் இனவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்