ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் வாக்களிப்பு

🕔 June 24, 2016

British+EU - 0091ரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என, அந்த நாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிணங்க, விலக வேண்டுமென 51.9 சதவீதம் மக்களும்,  யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டும் என 48.1 சதவீதம் மக்களும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993–ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்ஸ், ஜெர்மன், பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்துகல் உள்ளிட்ட 28 நாடுகள்அங்கம் வகிக்கின்றன.

இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள், அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம். வேலைவாய்ப்புகளை பெறலாம். கல்வி கற்கலாம். தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள். பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிற நாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை அறிய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டன் முழுவதும் எழுந்தது. பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சி தரப்பிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.

ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதை அதன் நட்பு நாடுகள் விரும்பவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நேட்டோ உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பிரிட்டனை கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று வியாழக்கிழமை பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதையடுத்து, நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 382 மையங்களில் இன்று வெள்ளிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். அந்தவகையில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.

ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்தும்  நீடிப்பதையே பிரிட்டன் நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் விரும்பினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், வாக்கெடுப்பின் முடிவு அவரது விருப்பத்துக்கு மாறாக அமைந்துள்ளதால் டேவிட் கேமரூனின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அந்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தின் சார்பில் இதுபற்றி இறுதி முடிவு எடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுமையாக விலக மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிகிறது.

இதற்கிடையே, வாக்கெடுப்பு முடிவையடுத்து, பிரதமர் டேவிட் கேமரூன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற பிரச்சாரம் அங்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்