முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை
கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெறுகிறது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், நீதவான் திலின கமகே இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி வைத்திருந்த காரணத்தால், நீதவான் திலின கமகே கடந்த மாதம் 20ஆம் திகதி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், அவர் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, நீதவான் திலின கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டதோடு, குறித்த வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.