ஹக்கீம் – ஹசனலி லடாய்க்கு தீர்வு; கூட்டு அறிக்கை விடவும் தயார்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கும் இடையில் நிலவி வந்த அனைத்து உள்ளக முரண்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் ஹசனலிக்குமிடையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பின் போதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்னன.
இருவருக்குமிடையில் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்த்து வைப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக்கின் கொழும்பில் இல்லத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஏ.எம்.இஸ்ஸாக் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; “எல்லாப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தலைவர் ஹக்கீமும் செயலாளர் நாயகம் ஹசனலியும் வெகுவிரைவில் கூட்டு அறிக்கையொன்றினை வெளியிடவுள்ளார்கள். அவ்வறிக்கையில் அனைத்து விடயங்களும் தெளிவுப்படுத்தப்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசனலி மற்றும் கட்சியின் அரசியல் உயர் பீட உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மௌலவிகள் இருவரது விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட குழுவினர், செயலாளர் ஹசன்அலிக்கும் தலைவர் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவுள்ளனர்.