தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து

🕔 May 20, 2016

Vijayakanth - 099ந்தியா தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் விஜயகாந்த், கட்டுப் பணத்தையும் இழந்துள்ளார்.

இதேவேளை, அவரின் தேமுதிக – மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜயகாந்த் – உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்ட. அங்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு ஆகியோரும் போட்டியிட்டனர்.

திருநாவலூர் தனியார் கலைக் கல்லூரியில் உளுந்தூர்பேட்டை வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி என்பதால் அந்தக் கல்லூரி வளாக பகுதியில் ஏராளமான கட்சியினர் திரண்டிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் திமுக 3960 வாக்குகளும், அதிமுக 2992 வாக்குகளும், தேமுதிக 1494 வாக்குகளும் பெற்றன. 02 ஆம் சுற்றிலும் தேமுதிக 03 ஆம் இடத்திலேயே தொடர்ந்ததால், வாக்கு எண்ணும் இடத்துக்கு வெளியே கூடியிருந்த மக்கள் நலக் கூட்டணி – தேமுதிக தொண்டர்கள் அங்கிருந்து சோகத்துடன் கலைந்து சென்றனர்.

கட்டுப் பணம் இழந்தார் 

கடந்த சட்ட மன்றத் தேர்தல்களில் 2006 விருத்தாசலத்திலும், 2011 ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த், இம்முறை உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோற்றதோடு, கட்டுப் பணத்தையும் இழக்க நேர்ந்தது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 02 லட்சத்து 26 ஆயிரத்து 120. இதில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 02 ஆம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து விஜயகாந்த் 34,474 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் 20,233 வாக்குகள் பெற்றார்.

பதிவான வாக்குகளில் 06 இல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால்தான் கட்டுப் பணம் பெறமுடியும். அந்த வகையில் விஜயகாந்த் 34,474 வாக்குகள் மட்டுமே பெற்றதால் அவர் தனது கட்டுப் பணத்தினை இழக்க நேர்ந்தது.

மாநிலக் கட்சி அங்கீகாரம் பறிபோகிறது

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவை தேமுதிக சந்தித்தது . 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 8% ஆக இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி தற்போது வெறும் 2.4% சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற ஒரு கட்சியானது அது எதிர்கொள்ளும் தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 06% பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தேமுதிக மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்