ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க, 150 மில்லியனில் அணைக்கட்டு
🕔 October 17, 2015
– முன்ஸிப் –
ஒலுவில் பிரதேசத்தில் கடலரிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு கடலரிப்பினைத் தடுக்கும் பொருட்டு, அணைக்கட்டுகளை அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூளவள முகாமைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காக தற்போது 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.
ஆயினும், மேற்படி தடுப்பு அணைகளை அமைப்பதற்கான மொத்தச் செலவாக 450 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாகவே 150 மில்லியன் ரூபாய் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டினார்.
ஒலுவில் பிரதேசத்திலுள்ள வெளிச்ச வீட்டினை அண்மித்த கடற்கரைப் பகுதிகளில் தற்போது, பாரிய பாராங்கற்களால் இந்தத் தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சில காலங்களுக்கு முன்னர், கடலினுள் இவ்வாறு பாரிய பாறாங்கற்கறைக் கொண்டு தடுப்பு அணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது கடலரிப்பு தீவிரமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும், மு.காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் அண்மையில் ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்து, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதோடு, கடலரிப்பினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, உரிய தரப்பினர்களுடன் பேசியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.