ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்; அமெரிக்க குடியுரிமையையும் துறப்பேன்: கோட்டா தெரிவிப்பு
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்காக தனது அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு;
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியி டுவது பற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா?
பதில்: இல்லை. ஆனால், பேசப்படுகிறது. அதுபற்றி முடிவு செய்வதற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய, பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும்.
கேள்வி: தற்போதைய சூழ்நிலையில், அந்த வகிபாகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட, வேட்பாளராவதற்கு பொருத்தமானவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆதரவையும், பிரபலத்தையும், தற்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய ஆற்றலையும் அவர் கொண்டுள்ளார். மேலும் அவர் அனுபவம் மிக்கவர்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தினால், துரதிர்ஷ்டவசமாக, அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது. அவரது ஆதரவைப் பெற்ற எவரேனும் ஒருவரால்தான் வெற்றிபெற முடியும்.
கேள்வி: உங்களை வேட்பாளராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர் கொள்வதற்கு, நீங்கள் தயாரா?
பதில்: அவர் அவ்வாறு நினைத்தால், நான் போட்டியிடுவேன். அதற்காக முன்வருவேன். போட்டியிடுவதற்கான ஆற்றல் எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கேள்வி: அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ளதால், இரட்டைக் குடியுரிமை உங்களுக்குத் தடையாக இருக்கிறது. இதனை எப்படி தீர்க்கப் போகிறீர்கள்?
பதில்: 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி, இப்போது என்னால் போட்டியிட முடியாது. இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரிமையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.
கேள்வி: அதற்கான செயல்முறைகள் என்ன?
பதில்: அது என்னைப் பொறுத்த விடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறைதான்.