போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு
போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி, மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதியினை வழங்கி, குடிப் பழக்கத்தினை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.
பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்’;
“இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ் அரசாங்கம், இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலமாக குடிப்பழக்கத்தை இந்த அரசாங்கம் ஊக்குவிக்கிறது.
எமது காலத்தில் மாதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக விமர்சித்தவர்கள்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர்.
நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே உள்ளது. இவர்களின் செயற்பாடுகள் எதிலுமில்லை” என்றார்.
(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)