
அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவொன்றினால், இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டதை பொலிஸ் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வூட்லர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகத் தொடர்ந்து நீடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது ஆதரிக்கும் வகையிலான கருத்துகள், அப்பேரணியில் தெரிவிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அர்ச்சுனா ராமநாதன், தன்னை ஒரு “புலி” (Tiger) என்று குறிப்பிட்டதுடன், வாக்காளர்கள் ஒரு “நரியை” (fox) தெரிவு செய்துள்ளதாக விமர்சித்தார். இது ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்கவை மறைமுகமாகக் குறிப்பதாக அமைந்திருந்தது.
இக்கருத்துகள் தெரிவிக்கப்பட்டபோது, மேடையில் இருந்த பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் ஆரவாரம் செய்ததையும் காண முடிந்தது.



