மைத்திரி விழுங்கிய, பொது பல சேனாவின் ‘கயிறு’

🕔 March 7, 2016
KSA+BBS - 012பொதுபல சேனா அமைப்பைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சொன்றில் தலையீடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கங்கள் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக அண்மைக்காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்களின் மதிப்பு குறைவடைந்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பும் குறைந்துள்ளது.

இதன் காரணமாக மிக விரைவில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியொன்றை எதிர்கொள்வதுடன், அரசாங்கத்தின அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பித நிலைக்குத் தள்ளப்பட்டு நாடு மிக மோசமான நிலையொன்றை எதிர் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒருகட்டமாக அர்ஜுன் மகேந்திரனின் கடும் பிரயத்தனங்களின் பிரதிபலனாக இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்க சஊதி அரேபிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்தத் தொகையானது இலங்கையின் பத்து வருடங்களுக்கான மொத்த தேசிய வருமானத்தை ஒத்த தொகையாகும்.

எனினும் இந்தத் தொகையை அன்பளிப்பாக வழங்கும் அதே வேளை இலங்கையில் வட்டியில்லா வங்கி முறையொன்றை அங்கீகரிக்குமாறும் சவுதி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவ்வாறான வங்கி முறை ஒன்றின் ஊடாக மட்டுமே எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவ முடியும் என்றும் சஊதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த பெப்ரவரி மாதம் 26ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்துள்ள பொது பல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே, இலங்கையில் வட்டியில்லா வங்கி முறை அங்கீகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மேலதிகச் செயலாளர் ஒருவர் மூலம் தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் வட்டியில்லா வங்கி முறையானது ஒரு சமூகத்தினரின் மத சட்டதிட்டங்களுக்கு அமைவானது என்பதன் காரணமாக அவ்வாறான வங்கி முறையொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான வங்கியொன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாட்களுக்குள் தனக்கு அறிவிக்குமாறும் அமைச்சின் செயலாளர் பணிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளைப் பார்க்கிலும் பொதுபல சேனா வைத்திருப்திப்படுத்துவது முக்கியமானது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி செயற்படுவதை உணரமுடிகின்றது.

அத்துடன் தேசிய கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சானது பிரதமர் ரணிலின் கீழ் செயற்படும் ஒரு அமைச்சாகும்.

குறித்த அமைச்சின் செயலாளருக்கு அவரது பதவி நிலைக்குக் கீழே உள்ள தனது மேலதிக செயலாளர் ஒருவரைக் கொண்டு கடிதம் அனுப்பியிருப்பதன் மூலம் அமைச்சு செயலாளரையும் ஜனாதிபதி அவமதித்துள்ளார்.

பொதுவாக அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் அல்லது அமைச்சரவை செயலாளர் தவிர்ந்த வேறு நபர்கள் விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அண்மைக்காலமாக பொதுபல சேனா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு இடையிலான நல்லுறவு வலுப்பட்டுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்