ஒன்பது வயது சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த தந்தை; பொதுமக்களின் தகவலையடுத்து கைது
– க. கிஷாந்தன் –
ஒன்பது வயதுடைய சிறுவனின் கழுத்தில் சூடு வைத்த குற்றச்சாட்டில், அச் சிறுவனின் தந்தையை தலவாக்கலை பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைதுசெய்தனர்.
தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவன், கழுத்தில் சூடு வைக்கப்பட்ட காயத்துடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சொல் கேளாமல், குழப்பங்கள் செய்ததால் மகனின் கழுத்தில், நெருப்பில் காய்ச்சிய கரண்டியால் சூடு வைத்ததாக, சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சூடு வைக்கப்பட்டமை காரணமாக சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்ததோடு, சிறுவனை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.