தலைப்புச் செய்திகள்

தனது கல்வித் தகைமை பற்றி பரப்பப்படும் செய்திகளுக்கு நாமல் மறுப்பு

னது பட்டம் மற்றும் கல்வித் தகைமைகள் குறித்து பரப்பப்படும் செய்திகளை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பி-ரிப்போர்ட்’ மூலம் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அந்த விசாரணையின் முடிவுகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷ மேலும் கூறினார்.

நொவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கான பதிலை முழு நாடும் காண முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்குள், அவர்கள் நீதிமன்றத்தில் பி-ரிப்போர்ட் தாக்கல் செய்து எனது பட்டப்படிப்பு சான்றிதழை விசாரிக்க ஒப்புதல் பெற்றனர். அப்போதிருந்து, பல மாதங்களாக, அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று வரை, நீதிமன்றத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால் வலைத்தளங்கள் தொடர்ந்து சேற்றை வீசி வருகின்றன. இப்போது அவர்கள் நுகேகொடை பேரணிக்கு பயப்படுகிறார்கள். அவர்கள் பொய்யான வதந்திகளைப் பரப்புகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அவமானங்கள் அனைத்திற்கும் நொவம்பர் 21 ஆம் திகதி பதில் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ; நாமல் ராஜபக்ஷவின் சட்டப் பட்டச் சான்றிதழ் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளதாகவும், அது குறித்து அவர் ஒரு விளக்கத்தை வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இதற்குப் பதிலளித்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, இந்த சம்பவம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சி.ஐ.டி) நீதிமன்றத்தில் எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என்றார்.

“ஒரு அரசாங்கம் தோல்வியடையும் போது, ​​சேறு பூசுவது நல்ல தந்திரோபாயம் அல்ல” என்றும் டி.வி. சானக மேலும் தெரிவித்தார்.