
மூன்றரைக் கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 11 மில்லியன் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை வைத்திருந்த இருவரை, கடவத்தை – கோனஹேன மற்றும் தொடம்பே – தெகாதன ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட வெவ்வெறு நடவடிக்கைகளின் போது, விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 3 கிலோ 536 கிராம் ஐஸ் போதைப் பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்ட 11 மில்லியன் ரூபாய் ரொக்கம், மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு கார் ஆகியவை சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்டன.
மாளிகாவத்தை மற்றும் கடவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது துபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குற்றப் பிரமுகரும், பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவரின் நெருங்கிய சகாக்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



