“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன

🕔 June 27, 2024

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படாது என்று, அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயங்களைக் கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா முதலில் நடக்கும் என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை கூற வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாமன்ற தேர்தல் உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போது ரணில் விக்கிரமசிங்க மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம். அனுபவத்துடனும் முதிர்ச்சியுடனும் சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.

இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ‘ரணில்தான் ஆள்’ என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.

நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான். அதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 மார்ச்சில் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகள் ஏற்பட்டன. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது. நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இன்று ஒரு நல்ல செய்தி வரவிருக்கும் நேரமும் இவ்வாறு செய்கின்றனர்.

கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குகு ஆளாகியிருந்தனர் என நான் நம்புகிறேன். ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது நம் நாட்டின் தனியார் துறை கூட சரிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஊழியர்களின் சம்பளம் கூட குறைக்கப்பட்டது. ஆனால் அரசு அதைச் செய்யவில்லை. அரச ஊழியர்களை முடிந்தவரை அரசு பாதுகாத்தது. அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி குழுவிருக்கும் போது, அந்தக் குழுவின் ஊடாக தமக்கு சாதகமான பதில் கிடைக்கும் எனத் தெரிந்தும், தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்த வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களைச் செய்கிறார்கள்.

இந்த சம்பள முரண்பாட்டை ஜனவரி 2025 க்குள் தீர்க்க ஒரு குழுவை அமைத்து 03 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு கூறியுள்ளோம். தருகிறோம் என்று சொன்னாலும், பிரான்ஸ் மாநாட்டின் மூலம் நம் நாட்டிற்கு கிடைக்கும் சலுகையை குறைத்து, அரச சேவையை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் போது, இந்த நாட்டை அராஜகமாக்கி, மீண்டும் சீரழிக்க இவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள்.

பொருளாதார ரீதியாக அவர்களின் நிகழ்ச்சி நிரலை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, இதனை இந்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர் மனுஷ நாணயகார, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்