நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு: வரும் 08ஆம் திகதி ஆஜராகுமாறு ஹிருணிகாவுக்கு அறிவித்தல்
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர், முறைப்பாட்டாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பிப்புகளை கேட்டறிந்த பின்னர் நேற்று புதன்கிழமை (17) இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.
கல்கிசை நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பில் – நாடாமன்ற உறுப்பினர் ஹிருணிகா ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாக முறைப்பாட்டாளர் ஹிஷாம் ஜமால்டீன் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இது தற்போது நடைபெற்று வரும் நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், பொது மக்கள் மனதில் நீதி பரிபாலனம் தொடர்பாக சந்தேகங்களை ஏற்படுத்துவதற்கும் சமமானதாகும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனத் தெரிவித்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு அமைய, வரும் மே மாதம் 08ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.