புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்: சாய்ந்தமருது உணவகங்களில் சிக்கின

🕔 April 17, 2024

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருதிலுள்ள உணவகங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் நடத்திய திடீர் பரிசோதனைகளின் போது, புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது – கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பர் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில், சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி இறைச்சி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட சுகாதார வைத்திய அதிகாரி – உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் ஒழுங்கின்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியதோடு, சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கினார்.

மேலும் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்ளன.

இதன்போது மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் இதன்போது கைப்பற்றப்பட்டன. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான மேலதிக ஒழுங்குகளை -சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்