ஒரு கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய்; அச்சுறுத்திப் பெற முயற்சித்தவர் கைது
சுற்றுலாப் பயணி ஒருவரை துன்புறுத்தி அவரிடமிருந்து கொத்து ரொட்டி ஒன்றுக்கு 1900 ரூபாயை பெறுவதற்கு முயன்ற குற்றத்திற்காக, கொழும்பில் வீதியோர உணவு வியாபாரி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
வீதியோர உணவு விற்பனையாளர் ஒருவர் கொத்து ரொட்டிக்கு 1900 ரூபாய் வசூலிப்பதற்கு முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனையடுத்து சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில், குறித்த வீதியோர உணவு விற்பனையாளரை வாழைத்தோட்ட பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர் கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சாதாரண கடைகளில், கொத்து ரொட்டியொன்றுக்கு அதிகபட்சமாக 700 ரூபா வரையில் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிணை
இதனையடுத்து குறித்த நபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.
50 ஆயிரம் ரூபாய் காசுப் பிணையிலும், 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் சந்தேக நபரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.