ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் இலங்கை வந்தடைந்தனர்: பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்வதாக தகவல்

🕔 April 3, 2024
இந்தியாவிலிருந்து புறப்பட்ட போது…

ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கையை வந்துள்ள நிலையில், அவர்களை தடுத்து வைத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

பின்னர், 1999ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் சாந்தன், ரொபர்ட் பயஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட – ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்த இலங்கையரான சாந்தன் தனது தாயுடன் வாழ்வதற்காக தன்மை இலங்கைக்கு அனுப்புமாறு கோரியிருந்தார்.

இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்று அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில் – தனது நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக இந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆயினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தப் பின்னணயில் முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தாங்கள் நாடு திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன்படி, குறித்த மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சென்னை மேல் நீதிமன்றுக்கு தமிழக அரசு அறிவித்தது.

அவர்களில் முருகன் – லண்டனில் உள்ள தனது மகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் இலங்கைக்கு மாத்திரம் செல்வதற்கான கடவுச் சீட்டையே அவர்களுக்கு இந்தியாவில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் வழங்கியது.

இதன்படி, அவர்கள் இன்று இலங்கையை வந்தடைந்த நிலையிலேயே, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து வைத்து விசாரிதது வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்