நீதிமன்றில் தான் ஆஜராக வேண்டிய அவசியமில்லை: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி நீதிமன்றுக்கு அறிவிப்பு
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு – தான் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்கள் தொடர்பில், நீதிமன்றில் விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (03) தனது சட்ட ஆலோசகர் ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தின தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரமபிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டார். இதற்கிணங்க, மார்ச் 25ஆம் திகதி மைத்திரியிடம் சிஐடி 05 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் வாக்குமூலத்தைப் பெற்றது.
இதன் பின்னர் சிஐடிக்கு வழங்கிய வாக்குமூல் தொடர்பில் விளக்கமளிப்பதற்கு ஏப்ரல் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மாளிகாகந்த நீதவான் மார்ச் 28 ஆம் திகதி மைத்திரிக்கு உத்தரவிட்டது.
இந்தப் பின்னணியிலேயே, நீதிமன்றில் தான் ஆஜராகத் தேவையில்லை என, நீதிமன்றுக்கு இன்று அறிவித்துள்ளார்.