அலி சப்ரி ரஹீம் எம்.பியை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

🕔 March 7, 2024

கில இலங்கை மக்கள் காங்கிரஸின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தமது கட்சி உறுப்புரிமையை நீக்கி அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு மீதான விசாரணை கொழும்பு மாவட்ட பிரதான நீதவான் சந்துன் விதான முன்னிலையில் இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, குறித்த இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு எதிராக சாதாரண ஒழுக்காற்று நடவடிக்கையினை எடுப்பதற்கு கட்சிக்கு எவ்வித தடையும் இல்லை என நீதவான் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதி மீள எடுத்துக்கொள்வதற்கு நீதவான் தீர்மானித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி துபாயில் இருந்து நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சட்டவிரோதமான முறையில் பெருமளவான தங்கம் மற்றும் தொலைபேசிகளை நாட்முகடகு கடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து, தம்மை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையினை கட்சியின் நிர்வாகத்தினர் எடுத்துள்ளதுடன், அதனை வலுவிழக்க செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மனுவில் கோரியிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்

தொடர்பான செய்தி: தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்