‘கொத்துவேலி’ வெளியீடு

🕔 February 8, 2024

– அபு அலா –

பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச. நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் விருந்தினர்களாக – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் மாகாணப் பணிப்பாளர்கள், கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘எண்ணம்போல் வாழ்க்கை’ இலக்கிய மன்றத்தின் ஒருங்கமைப்பில் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவின் வரவேற்புரையை அந்த மன்றத்தின் தலைவர் எழுத்தாளர் கனக. தீபகாந்தனும், ‘கொத்துவேலி’ நூலாசிரியர் பற்றிய அறிமுகவுரை மற்றும் நூல்பற்றிய சிறப்பு நயவுரையை சமூகசேவைத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் எழுத்தாளர் ரா.கி. இளங்குமுதன் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் கவிஞர் ரா. ரத்தினசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.

‘நீலையூர் சுதா’ எனும் புனைபெயரில் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய கவிதைகள் மேற்படி ‘கொத்துவேலி’ எனும் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

அம்பாரை மாவட்டத்தின் பெரியநீலாவணையை பிறப்பிடமாக கொண்ட சுதாகரன் – கிழக்கு மாகாண மீன்பிடி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்