அரசியல் பிரவேசம் குறித்து சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி கருத்து

🕔 January 30, 2024

ரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லையென்றாலும், தனது கணவரால் வெற்றிடமாகிய அரசியல் தலைமைப் பதவியை ஏற்குமாறு புத்தளம் மக்களும் கட்சியும் தம்மிடம் கோரிக்கை விடுத்தால், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என, மறைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் அனுராதா ஜயக்கொடியின் வீட்டுக்கு ஆறுதல் சொல்வதற்கு சென்ற சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேராவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“எனது கணவர் புத்தளம் மாவட்டத்துக்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவை செய்துள்ளார். அவரிடம் உதவிகோரிய எவரையும் அவர் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பவில்லை. அவருக்கு நேர்ந்த அவலத்தை நானும் எனது பிள்ளைகளும் நம்ப முடியாதுள்ளோம். கனவு கண்டது போலவே உள்ளது.

எனது கணவரின் மரணத்தின் சூடு தணிவதற்கு முன்பே – நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என சில ஊடகங்கள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டுள்ளன. அப்படியான கேள்வியை யாரும் என்னிடம் கேட்கவுமில்லை, அப்படி வெளியிட நான் அனுமதிக்கவுமில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவிவுமில்லை.

அவருடைய அரசியல் விவகாரங்களை கொஞ்சம் சமாளித்து, அவருடைய தனிப்பட்ட செயலாளராக செயல்பட்டாலும், அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இன்னும் அந்த நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இடத்தை கையகப்படுத்தி மக்கள் பணியை முன்னெடுத்துச் செல்லுமாறு புத்தளம் மக்களும், நாட்டு மக்களும், கட்சித் தலைமையும் என்னைக் கேட்டுக் கொண்டால் அதுபற்றி நான் சிந்திக்க வேண்டி வரலாம்.

எனது நான்கு குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இப்போது உள்ளது.

எனக்கு சிறந்த தொழில் உள்ளது. அத்துடன் தன்னம்பிக்கையும் இருக்கிறது. நான் தனியாக இல்லை என்ற உணர்வுடன் எதிர்காலத்தை எதிர்கொள்கிறேன்.

நான் அவ்வாறு அரசியலுக்கு வந்தாலும், என் கணவர் செய்த அரசியலை என்னால் செய்யவே முடியாது. சிலர் அவரை விமர்சித்தாலும், அவர் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தார். பெரும்பாலான நாட்களில் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவர். என் கணவரைச் சுற்றி நிறைய மக்கள் இருந்தார்கள். அதுதான் அவருடைய பலம்.

எனது கணவர் புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான மக்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளை கட்டி கொடுத்தார். வீடற்றவர்களுக்கு 10,000-15,000 வீடுகளைக் கட்டிக் கொடுத்த எனது கணவர், தனது உயிரை இழந்தார். இறுதியில், தற்காலிகமாக கட்டப்பட்ட இடத்தில் இறுதிச் சடங்குகள் கூட செய்ய வேண்டியிருந்தது.

புத்தளம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்புகளுக்கு நான் தலைமை தாங்குகிறேன். பெண்களின் வலி எனக்குத் தெரியும். இன்று இச்சம்பவத்தினால் நானும் பொலிஸ் சார்ஜன்ட் அனுராதாவின் மனைவி லக்சிகா பிரசாதினியும் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். அவருக்கும் சார்ஜென்ட் ஜெயக்கொடியின் மகனுக்கும் என்ன தேவையோ அதை செய்வதற்கு தமக்கு தயாராகவுள்ளேன். அவர்கள் கைவிடப்படமாட்டார்கள்” என்றார்.

(நன்றி: அததெரன சிங்களம் – தமிழில் றிசாத் ஏ காதர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்