துமிந்த சில்வாவுக்கு கோட்டா வழங்கிய பொதுமன்னிப்பு ரத்து: தண்டனையை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு

🕔 January 17, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை – உச்ச நீதிமன்றம் இன்று (17) ரத்து செய்துள்ளது.

இதேவேளை துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட – ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்குகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா மற்றும், மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கஸாலி ஹுசைன் ஆகியோர் மேற்படி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், 2016 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு – துமிந்த சில்வாவை விடுதலை செய்ய சிபாரிசு செய்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 ஜூன் மாதம் விசேட ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியது.

இதனையடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் – அந்த மாத இறுதியில் கைது செய்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்