42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு

🕔 January 13, 2024

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை – அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலிலுள்ள 35,505 திறந்த பிடியாணை உள்ளவர்கள், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள். 2,485 நபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நடந்த குற்றங்களுக்காக தேடப்பட்டு வருபவர்களாவர்.

இந்த நிலையில் நடைபெற்று வரும் ‘யுக்திய’ எனும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில், அனைத்து பொலிஸ் நிலையங்களின் பிரிவு அதிகாரிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமையக ஆய்வாளர்கள் (HQIs), மற்றும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் நாளை (14) முதல் தீவிரமாக பங்கேற்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், தேடப்படும் சந்தேக நபர்களை அடுத்த மாதத்திற்குள் கைது செய்யும் நோக்கில் 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு அனைத்து குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புடைய நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ நடவடிக்கைக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் குற்றச் செயல்களைக் குறைப்பதிலும் – தீவிரமான முயற்சிகள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்