எந்தப் பாடசாலையிலும் ஹபாயா அணியத் தடை இல்லை: ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு எதிரான ஆசிரியை பஹ்மிதாவின் வழக்கில் கிடைத்த வெற்றி

🕔 November 9, 2023

லங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை எனும் நிலை, திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரி ஹபாயா விவகார – மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு, எழுத்துமூல சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தமையினை அடுத்து ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை ஷண்முகா மகளிர் இந்துக் கல்லூரியில் ஹபாயா அணியத் தடைவிதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் (Writ) வழக்கு நேற்று (07) எழுத்துமூல சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது.

தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, ஆசிரியை பஹ்மிதா – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை, அதனைத் தடுத்தமைக்கு எதிராக ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார்.

பாடசாலை அதிபர் சமூகம் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து, அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிக்கு வந்ததிருந்தது. எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும்.

ஆனால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஷண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை என்ற உத்தரவாத்தினை எழுத்து மூலம் தந்ததை அடுத்து – இவ்வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எந்தப் பாடசாலைகளிலும் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாக அமைந்துள்ளதாக, ஆசிரியை பஹ்மிதா சார்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த குரல்கள் இயக்கம் தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட ஆசிரியை சார்பில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான றாஸி முஹம்மத் மற்றும் றுடானி சாஹிர் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

சட்டத்தரணிகள் றாஸி முஹம்மத், றுடானி சாஹிர்

தொடர்பான செய்தி: கையொப்பமிட அனுமதிக்காமல், வெளியிலிருந்து ஆட்களை வரவழைத்து என்னைத் தாக்கினார்கள்: வைத்தியசாலையில் இருந்து, ஆசிரியை பஹ்மிதா வாக்குமூலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்