அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் உயர்த்துவது குறித்தும் ஆலோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி 100,000 கையொப்பங்களுடன் மனுவொன்றை ஏற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் தொடர்பில் அரசாங்கம் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதாக கூறினார். வரவு – செலுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே சம்பளம் உயர்த்தப்படும் என வாக்குறுதி அளித்தமை அதற்கு உதாரணம் எனவும் அவர் குறுிப்பிட்டார்.
1.4 மில்லியன் அரச ஊழியர்கள் மற்றும் 600,000 ஓய்வூதியதாரர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 1000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டால், எவ்வளவு பணம் செலவிடப்படும் என்பதை அரசாங்கம் அறிந்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.