நீதிபதி அல் ஹாபிழ் அப்துல்லாஹ், திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றம்
– அஹமட் –
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் எம்.எம். அப்துல்லாஹ் – திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி அப்துல்லாஹ்வுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (20) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நீதிபதி அப்துல்லாஹ் தனது இளமைப் பருவத்தில் அல் ஹாபிழ் (திருக்குர்ஆனை மனனம் செய்தவர்) பட்டம் பெற்றவராவார்.
1997ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பணியாற்றத் தொடங்கிய அவர், 2003ஆம் ஆண்டு நீதவானாக நியமனம் பெற்று – கல்கிசை நீதவான் நீதிமன்றில் பணியாற்றத் தொடங்கினார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு அவர் மேல் நீதிமன்ற நீதிபதியானார். இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். பின்னர் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் கடமையாற்றினார்.
இந்த நிலையிலேயே அவர் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
சிறந்த மார்க்க அறிவுகொண்ட நீதிபதி என்.எம். அப்துல்லாஹ், பொதுமக்களுடன் மிகவும் அன்பாகப் பழகுபவர்.