அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

🕔 October 15, 2023

ரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது – மஹிந்தானந்த அளுத்கம இதனைக் குறிப்பிட்டார்.

“கடந்த ஆண்டை விட தற்போதைய நிலைமை வேறு. இன்று மின்வெட்டு இல்லை. எரிவாயு இருக்கிறது. இன்று எரிபொருள் உள்ளது.

600 ரூபாவில் இருந்த பருப்பு விலை இன்று குறைந்துள்ளது.  250 ரூபாயாக இருந்த அரிசி விலையும் தற்போது குறைந்துள்ளது. இந்த ஆண்டு நொவம்பர் மாதத்திற்குள் பொருட்களின் விலை இன்னும் குறையும்.

மக்கள் வாழக்கூடிய சூழல் உருவாகி வருகிறது என்பதை நினைவூட்ட வேண்டும். சர்வதேச நாணயத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் கடனை மறுசீரமைக்க ஒப்புக்கொண்டோம். ஏனைய நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மேலும் அபிவிருத்து திட்டங்களை மீண்டும் தொடங்கலாம்” எனவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்