ஈஸ்டர் தின தாக்குதல்; “சஹ்ரானை கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார்”: சிஐடி யின் முன்னாள் பொறுப்பதிகாரி ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

🕔 September 19, 2023

ஸ்டர் தின தாக்குதலில் முன்னணி தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிமைக் கட்டுப்படுத்திய மற்றொரு நபர் இருந்தார் என, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பாக இருந்து ஓய்வுபெற்ற சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனரட்ண  தெரிவித்துள்ளார்.

“அந்த நபர் மிகவும் புத்திசாலி, இலங்கையில் முதன்முதலில் ஒருங்கிணைந்த பயங்கரவாத தாக்குதலை ஏற்பாடு செய்யும் திறன் பெற்றவர்” எனவும் ரவி செனவிரட்ன கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் நடத்தும் ரிஎன்எல் தொலைக்காட்சிக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக மூன்று விசாரணை ஆணைக்குழுக்கள் முன் சாட்சியங்களை வழங்கிய ரவி செனவிரட்ன, அதன் பின்னர் பகிரங்கமாக தோன்றி மேற்படி நேர்காணலில் பேசினார்.

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமாய் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதல் நடைபெற்ற போது, குற்றப் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக ரவி செனவிரட்ன பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

புலனாய்வு அமைப்புகள் மற்றும் புலனாய்வு முகவர்களின் நடவடிக்கைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரானுக்கு மேல் யாரோ இருந்தார். அவர் மிகவும் திறமையும் பயிற்சியும் அனுபவமும் மிக்க ஒருவர். அவரிடம்ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு பலரை ஒருங்கிணைக்கும் திறன் இருந்தது எனவும் ரவி செனவிரட்ன கூறியுள்ளார்.

அரச மற்றும் ராணுவபுலனாய்வு பிரிவினருக்கு சஹ்ரான் ஹாசிமை தெரிந்திருந்தது. அவர்கள் அவருடன் இணைந்தும் செயற்பட்டுள்ளனர். தாக்குதலிற்கு முன்னரும் தாக்குதலின் போதும் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் விடுதலைப்புலிகள்  இயக்க உறுப்பினர்களே காரணம் என்ற கருத்தினை உருவாக்குவதற்கு புலனாய்வு பிரிவினர் கடுமையாக முயற்சித்தனர். அவர்கள் சில ஆதாரங்களை திட்டமிட்டு உருவாக்கினார்கள். இது குறித்து சிஐடிக்கு பெரும் சந்தேகம் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தின தாக்குதலுக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறிவதற்கான விசாரணைகளை தேசிய புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் பண்டார முன்னெடுத்தார். எனினும் இந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. ஐஎஸ் அமைப்பிடமிருந்து சஹ்ரானுக்கு உதவிகள் கிடைத்தமைக்கான ஆதாரங்கள் எதுவுமில்லை”.

“தேசிய புலனாய்வு பிரிவின் தற்போதைய தலைவர் சுரேஸ் சாலேக்கும் சிஐடியினருக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை. சனல் 4 இன் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும்” எனவும் ரவி செனவிரட்ன தெரிவித்துள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்