நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளருக்கு விளக்க மறியல்
– பாறுக் ஷிஹான் –
கல்முனை மாநகர சபையில இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்த – முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை(23) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான், முன்னாள் கணக்காளர் உட்பட 04 சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கல்முனை மாநகர சபையின் நிதி மோசடி விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, நால்வர் கைதாகி இருந்தனர்.
இதில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஏனைய மூன்று சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (22) திருகோணமலையில் வைத்து, முன்னாள் கணக்காளரான மருதமுனையைச் சேர்ந்த ஏ.எச்.முகமது தஸ்தீக் (வயது 47) என்பவர் கைதானார்.
இவ்வாறு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்ட கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, அங்கு கணக்காளராகப் பணியாற்றி வந்த தஸ்தீக் என்பவர், திருகோணமலை மாகாண அலுவலகத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கைதான முன்னாள் கணக்காளர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களின் சேவைக்காலத்தில் வரியிருப்பாளர்கள் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளின்போது, மேலும் மோசடி முறைகேடுகள் எவையும் இடம்பெற்றுள்ளனவா என்பது தொடர்பிலும், இவற்றுடன் வேறு எவராவது சம்மந்தப்பட்டிருக்கின்றனரா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வரி மோசடி தொடர்பில் பல தரப்பினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சிலர் கைது செய்யப்பட்டு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ்விடயம் பற்றி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் நிமித்தம் நிர்வாக மட்டத்தில் சுயாதீன விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அத்துடன் குறித்த நிதி கையாடல் சம்பவம் தொடர்பில் – கடந்த காலங்களில் கல்முனை பொலிஸ் நிலையம் மற்றும் அம்பாறை விஷேட குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் விசாரணை பொறுப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவிடம் இவ்வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.