அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைகலப்பு: இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதி

🕔 July 28, 2023

– அஹமட் –

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் – கைகலப்பில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் இருவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பாடசாலையினுள் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆசிரியர்களில் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையிலும், மற்றொருவர் பாலமுனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த ஆசிரியர்கள் இருவருக்கும் இடையில் கடந்த ஒரு வாரகாலமாக பிரச்சினையொன்று இருந்து வந்ததாகவும், அது இன்றைய தினம் (28) கைகலப்பாக மாறியதாகவும் பாடசாலையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இது இவ்வாறிருக்க, இந்தப் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் – இதே பாடசாலை மாணவர்கள் இருவர் உள்ளடங்களாலான நால்வர் கொண்ட குழுவினரால் நேற்று முன்தினம் தாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியர் இருவர் கைகலப்பில் ஈடுபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் – மிக நீண்ட காலமாக ஒழுக்கக் கேடான பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வருவதாக புகார்கள் உள்ளன.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 124 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்தப் பாடசாலைக்கு தகுதியுடைய அதிபர் ஒருவர் இல்லாமையே – இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

தேசிய பாடசாலையொன்றுக்கு அதிபர் சேவையில் முதலாம் தரத்தையுடைய ஒருவரே அதிபராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராக தரம் – 03ஐ கொண்ட ஒருவர் நீண்ட காலமாக இருந்து வருகின்றார்.

தொடர்புடைய செய்தி: ஆசிரியரைத் தாக்கிய அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர்களை, சிறுவர் சீர்திருத்த நிலையத்தில் 14 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு

Comments