தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

🕔 July 27, 2023

பால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் 30-50 வருடங்களுக்கும் மேலானவை என தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.

குறிப்பிட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த வாகனங்ள் தற்போது தபால் திணைக்களத்தில் இல்லை எனவும் தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனங்கள் நாட்டில் வேறு எங்காவது பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது எவரேனும் அவற்றுக்கான வருமான உரிமம் பெற்றிருந்தால் உடனடியாக தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இதுவரை தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்த தபால் மா அதிபர் சத்குமார, வாகனங்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காவிட்டால், அவற்றை தரவு அமைப்பிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, தபால் திணைக்களத்தின் ’60 ஸ்ரீ 7256′ இலக்க பஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்திரைப் பணியகத்தின் விளம்பரப் பிரச்சாரங்களுக்கு இந்தப் பேருந்தை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் சத்குமார தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்