கைத்தொலைபேசி திருட்டுக் கும்பல் கல்முனையில் சிக்கியது: வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்க்க வருவோர் இலக்கு என தெரிவிப்பு

🕔 July 25, 2023

– பாறுக் ஷிஹான் –

கைத்தொலைபேசிகளை நீண்ட காலமாக திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டம் – கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடப்பட்டமை தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை பொலிஸ் பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பு நேற்று திங்கட்கிழமை (24) மாலை கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையில் கைதாகிய 2 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு மற்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாரின் விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகளில் நோயாளிகளைப் பார்வையிட வருவோரை பிரதானமாக இலக்கு வைத்து, தொலைபேசிகளைத் திருடியுள்ளனர்.

சக நோயாளர்களாகவும் சிற்றுழியர்களாகவும் இதன்போது இவர்கள் நடித்து, சூட்சுமமாக தொலைபேசிகளைத் திருடியுள்ளனர்.

குறித்த திருட்டுக் கும்பலின் தலைவராக 32 வயதுடைய சந்தேக நபர் செயற்பட்டு வந்துள்ளார்.

மற்றைய சந்தேக நபர் கல்முனை மாநகரில் கைத்தொலைபேசி கடையை நடத்தி வருபவராவார். 39 வயது மதிக்கத்தக்கவர் இவர் – களவாடப்பட்டு வருகின்ற கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தவிர குறித்த சந்தேக நபர்கள் கல்முனை பிரதான பேரூந்து நிலையம் மற்றும் பேரூந்துகளில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மண்டூர், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் தமது பெறுமதியான கைத்தொலைபேசிகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரினால் தற்போது கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளின் பெறுமதி 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியானவை. சில கைத்தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தத்தமது தொலைபேசிகளை இனங்கண்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகளை தொலைத்திருந்தால், தம்மை தொடர்பு கொள்ளுமாறு கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கேட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்