உள்ளாடைக்குள் தங்க ஜெல் கடத்திய பெண், விமான நிலையத்தில் கைது
உள்ளாடைக்குள் வைத்து தங்க ‘ஜெல்’ பொதிகளைக் கடத்த முற்பட்ட பெண் ஒருவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இன்று (04) கைது செய்தனர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வரியில்லா வணிக வளாகத்தில் (Duty free shop) பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டார்.
ஐந்து கிலோகிராம் எடையுள்ள தங்க ‘ஜெல்’லை – அவர் கடத்த முயன்ற போது சிக்கினார்.
கைப்பற்றப்பட்ட பொருள் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.
24 வயதான பெண், நான்கு பார்சல்களில் குறித்த தங்க ‘ஜெல்’லை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
விமான நிலைய வளாகத்தில் இருந்து அவர் இன்று (04) காலை வெளியேறும் போது, சிசிடிவி கேமராவில் அவருடைய நடத்தையை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரைக் கைது செய்தனர்.
குறித்த பெண் கடத்தப்பட்ட பொருட்களுடன் – மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.