சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி
🕔 June 4, 2023
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Kilakkin-Kedayam-750x150-01-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/02/EFC-750X150-02.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/12/Atham-Lebbe-01-7500X150-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/01/Abdullah-750X150-03-.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/06/Ranil-0987-1024x481.jpeg)
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறினார்.
“பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடைடைந்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இலங்கை மூலோபாய குறைபாடுகள் கொண்ட நாடாக பட்டியலிடப்படலாம் என்றும் அதனால் நாட்டின் அபிவிருத்திக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் அறிவுறுத்தினார்.
தேசிய கொள்கையொன்றின் கீழ் நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – தேசிய கொள்கை வகுப்பதற்கான குழுவை நியமிக்கும் பணிகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேசிய கொள்கை வகுப்புச் செயற்பாடுகளின் போது அனைத்து தரப்பினரதும் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும், மேற்படி விடயங்கள் குறித்து உடன்பாடு ஒன்றை உருவாக்கி அவற்றை அமுல்படுத்துவதற்கான முனைப்புக்களை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
முன்னைய அரசாங்கங்கள் தேசிய கொள்கை ஒன்றை வகுக்கத் தவறியதன் காரணமாகவே இன்றளவில் நாட்டின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)
![](https://puthithu.com/wp-content/uploads/2024/03/Alahapuri-750X150-01.jpg)
![](https://puthithu.com/wp-content/uploads/2023/10/Fairoos-Express-750x150-01-.jpg)