ஒப்புக் கொண்டபடி பங்களாஷேின் கடன் செலுத்தப்படும்: மத்திய வங்கி ஆளுநர் உறுதி
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை, இந்த ஆண்டு இலங்கை செலுத்தும் என – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (01) தெரிவித்தார்.
ஓகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதத்தில் பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடன் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கை பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை ஏப்ரல் 2023 இல், மேலும் ஆறு மாதங்களுக்கு பங்களாதேஷ் நீடித்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 200 மில்லியன் டொலர் கடனுக்கான முதல் தவணையை வழங்குவதற்கு – பங்களாதேஷிடம் இலங்கை மத்திய வங்கி கால அவகாசம் கோரியதை அடுத்து, அதன் கடனை மறுசீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த நீடிப்பு வழங்கப்பட்டது.
வாஷிங்டனில் நடந்த உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களில் பேசிய பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரூஃப் தாலுக்டர், திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கை இன்னும் 06 மாதங்களைக் கோரியதாக தெரிவித்தார்.
இலங்கை தனது முதல் தவணையை இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திலும் மற்றொரு தவணையை செப்டெம்பர் மாதத்திலும் வழங்க ஒப்புக்கொண்டதாக தாலுக்டர் மேலும் குறிப்பிட்டார்.
ஒப்புக்கொண்டபடி பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என கலாநிதி வீரசிங்க இன்று உறுதியளித்தார்.