பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ‘பேராசிரியர்’ எனும் பதத்தைப் பயன்படுத்தலாமா: கோப் குழுவில் விளக்கம்

🕔 May 15, 2023

ல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பதவி வகித்தவர்கள், ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் தம்மை பேராசிரியர் என அழைத்துக் கொள்ள முடியாது என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘கோப்’ எனப்படும் நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்..

நாடாளுமன்ற பொது நிறுவனங்களுக்கான குழுவினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அழைக்கப்பட்டபோது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே, இது குறித்து பேராசிரியர் சம்பத் அமரதுங்கள குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த கோப் குழுவின் தலைவரான ரஞ்சித் பண்டார, பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிடம், “சிலர் தங்களைப் பேராசிரியர்கள் என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்” என்பதைச் சுட்டிக்காட்டியதோடு, “உண்மையில் யாரை பேராசிரியர் என்று கூறிக்கொள்ள முடியும்” என்று வினவினார்.

அதற்கு பதிலளித்த பேராசிரியர் அமரதுங்க, “பேராசிரியர் என்பது ஒரு பதவி என்றும், பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அல்லது பதவி விலகிய பின்னர் அனைவரும் அதைப் பயன்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.

எனினும் ஒருவர், பணி ஓய்வுக்குப் பின்னரும் தம்மை பேராசிரியர் என்ற கூறிக்கொள்வதற்கு சில அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான சுற்றறிக்கையை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஒரு பல்கலைக்கழகத்தின் செனட், கல்வித்துறைக்கான குறித்த ஒருவரின் சேவையை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு ‘எமரிட்டஸ் பேராசிரியர்’ என்ற ‘வாழ்நாள் பேராசிரியர்’ பதவியை வழங்குவதற்கான கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்,

இது அவர்களை வாழ்நாள் முழுவதும் பேராசிரியராகக் குறிப்பிடும் உரிமையை அளிக்கிறது.

அந்த கௌரவம் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் அமரதுங்க குறிப்பிட்டார்.

இதன்படி வாழ்நாள் பேராசிரியர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார ஆகியோரை அழைக்கமுடியும் எனவும் பேராசிரியர் அமரதுங்க கூறினார்.

இதனையடுத்து சில கல்விப் பட்டங்களை யார் வைத்திருக்கலாம் என்பதை விபரிக்கும் நடைமுறை விதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோப் குழு பரிந்துரைத்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்